பாவை நோன்பிருக்கும் கன்னியர் இறைவனைப் புகழ்ந்து திருவடி ஏத்திச் சுனைநீர் ஆடுகிறார்கள். அப்போது
நீராடுகின்ற ஒருத்தி மற்றொருத்தியைப் பார்த்துக் கூறுவதைப் போல அமைந்திருக்கிறது திருவெம்பாவையின்
பன்னிரெண்டாம் பாடல்.
அருணகிரிநாதர் சொல்வார், எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப் பிறவி அவதாரம். அதாவது
எழுகடல் மணல் துகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தாலும் அவ்வெண்ணிக்கையை விட அதிகமானதாம் பிறவிகள்.
சீவான்மாக்கள் உய்தி அடைய விடாது பிணைத்துப் பிடித்திருக்கும் பிறவிப் பெருங்கடலில்
சிக்கியுள்ளன. இந்த நச்சு வளையத்திலிருந்து தப்பிப்பது எப்படி?
நம்மாழ்வார் கூறுவார், அற்றது பற்றெனில் உற்றது வீடு என்று. அதாவது பற்றை விட்டொழித்தால் ஈடேற்றம்
தானாக வரும் என்பதாகும். திருவள்ளுவர் சொல்வார், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி
சேராதார் என்று. அதாவது இறைவன் திருவடியைப் புனையென்று பற்றுகிறவர் பிறவிப் பெருங்கடலை நீந்திக்
கடந்துவிடுவார் என்பதாம்.
இந்தக் கன்னியரும் கரத்தில் அனலேந்தித் தில்லைச் சிற்றம்பலத்தில் நடனம் ஆடும் கூத்தன் அருளால் பிறவிப்
பிணிப்பு நீங்கிப் போக அந்த அருளில் திளைக்கிறார்கள்.
படைத்துக் காத்து அளிப்பவன் இறைவன் என்கிறார்கள். கம்பனும் சொல்வான், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீங்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையான் என்று. உலகம் யாவையும் என்பதற்கு
விளக்கத்தை மணிவாசகர் வாக்கில் பெறலாம். கட்புலனாகும் உலகம், கருத்துருவாகிய உலகம், வானுலகு என்று
மற்ற எல்லா உலகையும் படைத்துக் காத்து அழித்து விளையாடுகிறவன் ஆடல் நாயகன் என்பது கருத்தாகும்.
பாரதியும் சக்தியைப் பற்றிக் கூறும்போது ஆக்கலும் நீக்கலும் அவள் செய்கை என்பார்.
இப்படியாக பிறவித் தளை அறுந்து போனதைப் பாவையர் கொண்டாடுகிறார்கள். எப்படிக்
கொண்டாடுகிறார்களாம்? வளைகளும் பிற அணிகளும் பொய்கை அலைகளோடு சேர்ந்து ஆரவாரம் செய்ய
நீராடுகிறார்கள். அவ்வளவு ஆரவாரத்திலும் உடையான் பொற்பாதம் புகழ்ந்து நிற்கிறார்கள்.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com