இருபத்தாறு இருபத்தேழாம் பாடல்களில் குறிப்பிட்ட வேண்டுதல் வடிவம் கொள்கிறது. இருபத்தாறாம் பாடல்
பாவை நோன்புக்கானவற்றைக் கேட்பதாக அமைந்திருக்க இருபத்தேழாம் பாடல் சொந்தப் பிரார்த்தனைகளாக
அமைகின்றன.
இருபத்தாறாம் பாடலில் முதலடியில் இறைவனை மாலே என்று அழைக்கிறார்கள். உயர்ந்தவர், மேன்மையானவர்
என்று பொருள் கூறலாம். என்றாலும் இறைவனின் உயர்வுக்கு என ஒரு சிறப்பு உண்டு. அதைத்தான்
நம்மாழ்வார் இப்படிச் சொல்கிறார்.
உயர்வற உயர்நலம் உடையவன் - பிற உயர்வுகள் யாவும் உயர்வற்றுப் போகுமாறான உயர்வை உடையவன்.
மணிவண்ணன் என்பது இறைவனுக்குத் தரப்பட்டுள்ள மறுபெயர். நீலமணியைக் குறித்து எழுந்த பெயர். நாராயணர்
நிறம் பற்றி மழை மேகத்தோடும் குவளை மலர்களோடும் நீலமணியோடும் பேசுவது வழக்கம்.
பாவை நோன்பின் போது வேண்டியவற்றுக்கான குறிப்பான வேண்டுதலாக இப்பாடல் அமைந்துள்ளது. சங்கு, பறை,
கொடி, விதானம் ஆகியவற்றோடு இறைவனைப் பாடும் அடியார்களின் சங்கத்தையும் வேண்டிப்
பாடுகிறார்கள்.பாவை நோன்பின் பாங்கைப் பாடுகிறது இப்பாடல்.
மூத்த தமிழறிஞராகிய முனைவர் ம.ரா.போ.குருசாமி அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது பாவையர்
வேண்டிக் கொண்டவற்றுக்கு ஏதாவது குறிப்பாகப் பொருள் கூற முடியுமா என்று கேட்டேன். அவர்
வெளிப்படையாக இலக்கியம் கூறுவதைத் தாண்டி குறிப்பாகப் பொருள் கூறுவது சாத்தியம்தான்.
என்றாலும் இயல்பான விளக்கமாக அமைய வேண்டும். பார்க்கப் போனால் விளக்கம் என்ற பெயரில்
வியாக்கியானம் செய்யும் போது இலக்கியத்தின் சுவை கெட்டுப் போய்விடுகிறது. என்றார்.
முன்னொரு பாடலில் உக்கமும் தட்டொளியும் வேண்டியதைக் கேட்டோம். சம்பிரதாயமான விளக்கம் மயக்கங்களை
ஓட்டுவதற்கு விசிறி என்று சொல்லும். மறுத்துப் பேச முடியாத விளக்கம்தான் என்றாலும் பாவை நோன்புக்குரிய
உபகரணங்களில் ஒன்று என்ற அளவில் நிறுத்திப் பார்த்தாலே உயர்ந்தவரை உபசரிக்க வீசும் சாமரம் என்று
பொருள் கொள்வதே இயல்பான விளக்கமாக அமைவதைப் பார்க்கிறோம்.
அவ்வாறே கண்ணாடியை மாசுகள் அனைத்தையும் நீக்கிவிட்ட ஆத்மாவாக விளக்கம் காண்பது
சம்பிரதாயம். இப்படியே இருபத்தாறாம் பாடலில் சொல்லியிருக்கிற சங்கு, பறை, விளக்கு, கொடி,
விதானம் ஆகியவற்றுக்கு விரித்துப் பொருள் தரலாம். ஆயினும் அவற்றை அவவவ்வாறே பார்ப்பதில் ஒரு
கவித்துவ அழகு வெளிப்படுகிறது. அதை இழக்கவோ?
ஆண்டாள் இலக்கியத்துக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. கடவுளின் ரூபாலங்காரம் பற்றி எல்லா ஆழ்வார்களும்தான்
பாடியிருக்கிறார்கள். இறைவனை அனுபவமாக உணர்ந்து சிறப்பிப்பதும் ஆழ்வார் இலக்கியத்துக்கே
உரிய இன்னொரு சிறப்பு. ஆழ்வார்கள் ஒவ்வொருவரையும் சங்கு, கதை, போன்ற இறைவனோடு
தொடர்புடையவற்றின் அம்சமாகக் கருதுவது மரபு. ஆண்டாள் நாச்சியாரை பூதேவியாகக் காண்பார்கள். எனவே
ஆண்டாள் நாச்சியாரின் பாடல்களில் இறைவனைக் கொண்டாடும் போது இறைவனின் அலங்கார விநோதங்கள்
சிறப்பாகப் பேசப்படுவதில் விநோதமில்லைதான்.
சம்பிரதாயமான விளக்கத்தில் இறைவனோடு தான் இருந்த காலத்தின் நினைவில் பூத்த மலர்கள் இக்கவிதைகள்
என்று சொல்வார்கள். ஒரு வகையில் பார்த்தால் இவ்விளக்கம் நாச்சியார் திருமொழிக்கே உரிய உணர்வுக்
குவியலுக்கு விளக்கமாக அமைகிறது என்றுதான் கொள்ள வேண்டும்.
தத்துவமாகவும் விரித்துப் பொருள் கொள்ளலாம். ஆன்மா தன் இயல்பான இருப்பில் இறைவனோடு இடையறாச்
சம்பந்தம் கொண்டது. பிறப்பெடுத்து வந்த போது அந்தச் சம்பந்தத்தை இழந்துவிட்டது. இழந்துவிட்ட இறைச்
சம்பந்தம் நோக்கி ஏங்கி பாவை நோன்பில் சங்கு, பறை, கொடி, விளக்கு, விதானம், சாமரம், கண்ணாடி
என்று அனைத்தையும் கொண்டு இறைவனோடு இருக்கும் உணர்வை அனுபவித்தலின் வெளிப்பாடாக அமைகிறது இப்பாடல்
என்றும் கொள்ளலாம்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com