அதே சங்கைக் கொண்டுதான் ஆநிரைகளை ஒருங்கு சேர்த்தானாம் கண்ணன்.
மூன்றாவதாகக் கோயில் வழிபாடுகளில் பயன்படுவதும் இந்தச் சங்கே. அப்படியான சங்கை ஒவ்வொரு பாவைக்
கன்னிக்கும் கண்ணன் அருள்கிறான்.
ஈரடிகளால் உலகளந்தபோது ஜாம்பவான் முழக்கியது பறை. அதே பறைதான் ராமன் ராவணனை வெற்றி கொண்ட
போதும் முழுங்கியது.
பல்லாண்டிசைத்தவர் பெரியாழ்வார். அப்பெரியாழ்வார் முதல் நம்மாழ்வார் வரை எல்லா ஆழ்வார்களையும் தன்
அருளால் பாட வைத்துப் பாவையருக்குப் பறையாகத் தந்திருக்கிறார் நாராயணன்.
விதானம் மதுரையிலிருந்து ஆய்ப்பாடிக்குக் கண்ணனைக் கொண்டு செல்லும் போது மழைக்குக் குடையாக வந்த
ஆதிசேஷன்.
இப்படியாக வேண்டிய பறைகள் அனைத்தும் தந்தருளிவிட்டானே இறைவன். இனி கேட்க என்ன இருக்கிறது பாவைக்
கன்னியருக்கு? பெண்மணிகள் அல்லவா? பொதுவான பறைகளுக்குப் பின் சொந்தமாகச் சில பரிசுகள்
கேட்கிறார்கள். ஆபரணங்களும் அணிமணியும் பூண்டு இறைவனோடு இருந்து போசனமும் செய்ய வேண்டுமாம்.
அதுதான் இருபத்தேழாம் பாடலாகிறது.
சரியான ஒரு கேள்வி மனதில் எழலாம். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம் என்ற பெண்களா இப்போது இத்தனையும் கேட்பது?
பதில் சொல்லியாக வேண்டிய கேள்விதான். தன்னுடையது என்றிருந்த அனைத்தையும் ஏற்கெனவே துறந்துவிட்டவர்கள்
பாவை நோன்பிருக்கும் கன்னியர். எனவே இனித் தமக்கென வேண்டுவது தமக்காவதாக இருக்கப் போவதல்ல.
இறைவனுடையதை இறைவனின் அருளாக அணிந்து கொள்ளப் போகிறார்கள். இறைவனின் அருளையே ஆடையாகவும்
அணிகலனாகவும் பூண்டு மூட நெய் பெய்த பாற்சோறாக உண்ணப் போகிறார்கள்.
உண்ணும் உணவும் தின்னும் வெற்றிலையும் பருகும் நீரும் நாரணனாகவே ஆகிப் போகின்றன. இப்படியாக
பெருமையானதாகவும் அருள் நிறைந்ததாகவும் ஆகிப் போனதையே அவர்கள் வேண்டுகிறார்கள் என்க.
பசித்தவன் உண்பதையல்ல இவர்கள் பேசுவது. இறைவனோடு இருத்தலைக் கொண்டாடி கூடியிருந்து விருந்தாடலைக்
குறிக்கிறார்கள்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்று முதலடியிலேயே இருப்பவர்கள் அனைவரும் அடியார்களே என்பதைத்
தெளிவாகக் குறித்துவிட்டார்கள். சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தவன் ராமன். பாண்டவர்களுக்காகத்தானே
கண்ணன் போர்க்களம் புகுந்தான்?
இப்படியாக இருபத்தேழாம் பாடல் பாவையரின் வாழ்நிலையே இறைவனோடான சம்பந்தத்தால் ஓர் உயர்
நிலைமாற்றம் அடைந்துவிடுவதைக் கொண்டாடுவதாக அமைகிறது என்று கொண்டு பார்த்தால் பாடல் பொருள்
பொதிந்ததாகிறது.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com