திருப்பள்ளியெழுச்சியை நிறைவு செய்யும் பாடல் விண்ணவரும் மண்ணவராகி இறை அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்கிறது. கம்பன் "வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா" என்று சொல்லியபோது விண்ணவரையும் விஞ்சியவர் என்று கருதிச் சொல்லியிருக்கமாட்டார்தான். என்றாலும் திருப்பள்ளியெழுச்சியின் நிறைவுப் பாடலைக் கண்ணுறும் எவரும் அவ்வேறுள குழுவில் விண்ணவரையும் சேர்த்துக் கொள்வார்தான்.
உலக அரங்கிலே ஆன்மாக்களாகப் பிறக்கச் செய்கிறான் என்று சொல்லிய ஒன்பதாம் பாடல் அப்படிப் பிறந்தவர்க்கு இம்மைப் பயனான தேனும் மறுமைப் பயனான அமுதமும் ஆகிறான் என்றும் சொல்லியது. இப்படியான இறைவனின் அருட்பெரும் திறத்துக்குப் பாத்திரமாகவேனும் மானுடராகப் பூமியில் போய்ப் பிறக்கலாகாதா என்று திருமாலும் பிரமனும் ஏங்குகிறார்கள் என்று சொல்லும் கவித்துவத்தை இந்தப் பாடலில் காண்கிறோம். இத்தனை நாட்களையும் விண்ணகத்தே வீணில் கழித்துவிட்டோமே என்ற அவர்தம் வருத்தத்தைக்கவித்துவத்தோடு குறிக்கிறது பாடல்.
அப்படி விண்ணவர்க்கும் மண்ணுலகப் பிறப்பாசை ஊட்டுகின்ற திருப்பெருந்துறைச் சிவபெருமானைப் பள்ளியெழுந்தருள வேண்டுகிறது திருப்பள்ளியெழுச்சியின் பத்தாம் பாடல்.
அவனியிற் பிறக்கச் செய்த ஆண்டவன்.
நாம் இன்னமும் பூமியில் போய்ப் பிறக்கவில்லையே.
நம்மை ஆட்கொண்டு கடைத்தேற்ற வல்லவன்.
பிறப்பருளிய கருணையாளன்.
அக்கருணையும் தானுமாக இவ்வுலகத்தே வந்திருந்து ஆட்கொள்ள வல்லவன்.
தெவிட்டாத அமுது.
விண்ணகத் தேவரும் நண்ண மாட்டா விழுப்பொருள்.
அவர்களுக்கும் உய்வதற்காக மண்ணகத்தே சென்று பிறக்க வேண்டும் என்று ஆசை.
இப்படியாகக் கடைசி இரண்டு பாடல்களையும் இணைத்துப் பார்க்க இப்பாடலின் பொருள் விரிகிறது.
போற்றி எம் வாழ்முதல் ஆகிய பொருளே என்று திருப்பள்ளியெழுச்சி தொடங்கியது. அலர்ந்த மெய்க் கருணையுமாகி உலகத்தே எழுந்தருளி ஆட்கொள்ள வேண்டி நிறைவுறுகிறது.
[Non-text portions of this message have been removed]