தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யரின் வாழ்க்கையிலிருந்து ஒரு
முக்கிய ஏடு:
ஐயரவர்கள், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம்
பாடம் பற்றுக்கொள்ள சேர்ந்த சமயம்.
ஐயரவர்களுக்கு ஆரம்பத்தில் வைத்த பெயர் வேங்கடராமன்.
அப்பெயருடன்தான் அவர் பிள்ளையவர்களிடம் மாணவராகச் சேர்ந்தார்.
ஒருநாள்.
நான் இவ்வாறு பாடம்கேட்டு வந்தபோது ஒருநாள் ஏதோ
விசாரிக்கையில் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, "உமக்கு
'வேங்கடராமன்' என்று ஏன் பெயர் வைத்தார்கள்?" என்று கேட்டார்.
நான், "வேங்கடாசலபதி குலதெய்வமாதலால் எங்கள்
குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக்கடவுள் பெயரையே கொள்வது
வழக்கம்" என்பதைத் தெரிவித்தேன்.
'வேங்கடராமன்' என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று
எனக்குக் குறிப்பாகப் புலப்பட்டது.
"உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?" என்று அவர் கேட்டார்.
"எங்கள் வீட்டில் என்னை 'சாமா' என்று அழைப்பார்கள்." என்றேன்.
"அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?"
"அது முழுப்பெயரன்றே! 'சாமிநாதன்' என்பதையே அவ்வாறு
மாறிவழங்குவார்கள்."
"அப்படியா? சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக
இருக்கிறது! உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாம் என்று
எண்ணுகிறேன். நீரும் இனிமேல் அப்பெயரையே சொல்லிக்கொள்ளும்"
என்று கூறினார்.
நான் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டேன்.
வேங்கடராமனாக இருந்த நான அன்று முதல் சாமிநாதனாகிவிட்டேன்.
பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி எல்லாரும் 'சாமிநாதன்' என்ற
பெயரையே வழங்கலாயினர். அன்புகனிந்த அவர் உள்ளத்திற்கு
உவப்பைத் தந்த அப்பெயரே எனக்கு நிலைத்துவிட்டது.