From dotthusg@y... Sat May 15 20:31:56 2004
Return-Path: X-Sender: dotthusg@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 38850 invoked from network); 16 May 2004 03:31:55 -0000
Received: from unknown (66.218.66.166)by m7.grp.scd.yahoo.com with QMQP; 16 May 2004 03:31:55 -0000
Received: from unknown (HELO smtp106.mail.sc5.yahoo.com) (66.163.169.226)by mta5.grp.scd.yahoo.com with SMTP; 16 May 2004 03:31:55 -0000
Received: from unknown (HELO personal-42boc0) (dotthusg@2... with login)by smtp106.mail.sc5.yahoo.com with SMTP; 16 May 2004 03:31:52 -0000
MIME-Version: 1.0
Message-Id: <40A6E122.000001.02244@PERSONAL-42BOC0>
Date: Sun, 16 May 2004 11:33:54 +0800
X-Mailer: IncrediMail (2501361)
References: To: X-FID: FLAVOR00-NONE-0000-0000-000000000000
X-Priority: 3
X-eGroups-Remote-IP: 66.163.169.226
From: "dotthusg" Subject: Re: [agathiyar] தமிழின் பெருமை - 1
X-Yahoo-Group-Post: member; u=171318375
X-Yahoo-Profile: dotthusg
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
அன்புடைய திரு இரத்தினகிரி அவர்களே வணக்கம்.
ஏன் பொறுத்தீர் ஐயா இத்தனை காலம்?
தண்டமிழ் சோலையில் உலாவி, இறையவன் வழிபாடியற்றி, இன்னமுது படைத்து,தான் பெற்ற இன்பம்
இவ்வையகமும் ஒருசேரப் பெறவேண்டும் என்ற நல்லுணர்வால் நம் பெரியோர் இயற்றிய நூல்கள் காலத்தால் அழிந்து
போயின பலப்பல.
பாதுகாக்கப்படவேண்டிய அரிய கருவூலப் பெட்டக்கங்கள் தேடுவாரின்றியும் பேணுவார் இன்றியும் சில
இடங்களில் தேங்கி நிற்கத்தான் செய்யும். கண்ணில் அத்தகைய கருவூலங்கள் கிடைக்கப் பெற்றால் அதனை மீளவும்
பலப்படுத்தி, பக்குவப்படுத்தி, பாதுகாத்து நிரந்தர வழியினில் அதை பலருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.
மூலம் மட்டுமின்றி அதனை கையெடுத்து உரை எழுதியும், திறனாய்வு செய்தும் பலர் எழுதிய பிற்கால
நூல்களும் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவை. எனவே இதனை ஒரு தமிழினத்தொண்டாக, வருங்கால
சந்ததிக்கு நம் விட்டுச் செல்லும் திரள் பயன் எனக்கொண்டும், இறைவழிபாடாகக்கொண்டும் செயற்பட அனைவரும்
இந்த அவசர யுகத்தினில் நேரம் கிடைத்த போதெல்லாம் உழைக்கத் தயாராக இருக்கவேண்டும் என்பது
இப்போதைய காலக் கட்டம்.
அயல் நாடுகளில் வாழும் தமிழ் சிறார்கள் மொழியின் சிறப்பைப் பெறமிகவும் பெருமுயற்சி
செய்தாகவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். பிறமொழிகளின் ஆதிக்கம் வலுவாக உள்ள நிலையில்
நம்முடைய தொண்டு மிகவும் இன்றியமையாத ஒன்று. பெரியவர் தமிழ்த் தாத்தா போன்று பலர் நமக்கு
எத்துணை பேருதவி செய்திருக்கின்றார்கள். பேரிலக்கியம் மட்டுமின்றி குழந்தை நூல்கள் வரை நமக்குத்
தேவை. திறமான புலமை படைத்தோர் நன்கு முன்வரவேண்டும்.அருள்கூர்ந்து பரணியில் தேடியும் பண்டைய நூல்களை
மின்னச்சு நகல் செய்தும் அகத்தியம் போன்ற பெரு நோக்கு கொண்ட இணைய தளங்களிலும் உங்கள் கணினியிலும்
சேமித்து பாதுகாத்து(back up)வையுங்கள். இன்று நீங்கள் இந்த வழியில் ஒரு பெரும் செல்வந்தர்
ஆகியுள்ளீர்கள். தொண்டு பெருகட்டும், சிறக்கட்டும். பல்லாண்டு வாழ்க!
அன்புடன்,
வெ.சுப்பிரமணியன்.
ஓம்.
-------Original Message-------
From: agathiyar@yahoogroups.com
Date: 05/16/04 03:13:45
To: agathiyar@yahoogroups.comagathiyaryahoogroups.com
Subject: [agathiyar] தமிழின் பெருமை - 1
தொன்மையும் நன்மையும் படைத்த மொழிதமிழ். இதனைப் பயின்று பேசுகின்ற உலகம் நல்ல உலகம்.
வடவேங்கடந்தென் குமரி யாயிடை தமிழ்கூறு நல்லுலகம்" என்பார் பனம்பாரனார்.
தமிழ் என்ற சொல்லே அமிழ்தம் போல் இனிக்கின்றது. ஒரு மொழிக்குப் பேர் இதுபோன்ற அருமையுடையதாக
அமைந்தது என்பதை இதுவரை நாம் கேள்விப்படவில்லை. தமிழில் மூன்று ஓசைகள்: வல்லோசை, மெல்லோசை,
இடையோசை. இந்த மூன்றோசைகளிலிருந்து மூன்று எழுத்துக்கள் இயைந்து தமிழ் என வந்தது. த-வல்லோசை;
மி-மெல்லோசை; ழ்-இடையோசை. என்ன அழகு! பேரே இப்படி அமைந்திருந்தால் தமிழ் இலக்கண அமைப்பு,
இலக்கியச் சுவை முதலியவைகள் எப்படியிருக்கும் என்பதைச் சிந்தித்து உணர்க.
தமிழின் பெருமையைச் சிந்திப்பாரின் எண்ணிக்கை குறைந்துவருகின்றது. கொஞ்சம் படித்தவுடன் முற்றுங்
கற்றுவிட்டதாகத் தருக்குஞ் செருக்கும் உற்று இடர்ப்படுவார் பலரைக் கண்டு வருந்துகின்றேன். பத்துக்கம்பன் என்று
புகழ் பெற்ற திரிசிரபுரம் மஹாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இறுதி வரைத் தன்னைத் தமிழ்
மாணவனாகக் கருதி வந்தனராம். அவர் தந்த பிச்சையல்லவா இன்று சிறிதாவது தமிழ் நலம் உலவி வருகின்றது
அகர வுயிர் பதியையும், உயிர்மெய் பசுக்களையும், மெய் பாசத்தையும் ஆக பதி பசு பாசத்தை
யறிவிக்கின்றது தமிழ்.
"அகரவுயிர் போல் அறிவாகி எங்கும்
நிகரில்இறை நிற்கும் நிறைந்து"
என்பது திருவருட்பயன்.
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன,நீர்வாழ்வன, தாவரம் என்று ஏழுவகைப் பிறப்புகளையும் தமிழில்
உள்ள ஏழு வேற்றுமைகள் குறிக்கின்றன.
முற்காலத்திலே தமிழில் வேட்கை கொண்டு தமிழாகிய தண்ணீரை அள்ளி அள்ளிப் பருகி, அமிழ்தினும் இனிய
தமிழ்க் கடலிலே நீந்தி விளையாடியபல புலவர்கள் வாழ்ந்தார்கள். அப்புலவர் வரிசையில் முன்னணியில்
நின்றவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை நிறைந்தது.
வேலமரத்தில் இளங் கொழுந்தில் கரியவயிர ரேகை ஓடுவது போல் சிவப்பிரகாசருக்கு மாணவராக நின்ற
போதே கவிதா சக்தியும் அதிசய புத்தியும் அமைந்திருந்தன.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது என்பது பழமொழி. ஸ்தாலிபுலாக நியாயம் என்று
வடமொழியில் கூறுவர். ஆகவே அவர் வாக்கில் வந்த ஒரு பாடலை எடுத்துக்காட்டி ஒருவாறு தமிழின் பெருமையை
நினைவு கூர்வோம்.
சிவப்பிரகாசர் இளமையில் தமிழ் கற்பதில் அளவற்ற வேட்கையுடையவராக இருந்தார். அவருடைய
அறிவாற்றலுக்கு ஏற்ற ஆசான் அமையவில்லை. திருநெல்வேலியில் வெள்ளியம்பலவாணர் என்பவர் ஒப்பற்ற தமிழ்
ஞாயிறாக அந்நாள் விளங்கினார். அவர் குமரகுருபரருடைய சீடர்; திருச்செந்தூர்க்கலம்பகம் முதலிய நூல்களைப்
பாடியவர். அவருடைய புகழ்க் கதிர் எங்கும் பரவியது. சூரியனுடைய ஒளியை விரும்பும் சக்கரவாகப் பறவை
போல் சிவப்பிரகாசர் அவரை நாடி ஓடினார். அவரைப் பணிந்து நின்றார். தமிழ் மொழியைப் பயிற்றி
வைக்க வேண்டும் என்று இரந்தார்.
வெள்ளியம்பலவாண முனிவர் தன்னை யடுத்த தமிழ் மாணவனுடைய அறிவை அளந்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
எண்ணினார்.
'தம்பீ! இதுவரை ஏதாவது தமிழ் பயின்றிருக்கின்றனையா?'
'ஆம், சிறிது பயின்றுள்ளேன்; தங்கள்பால்நிரம்பவும் பயில விரும்பி வந்துள்ளேன்'
'நல்லது; ஏதாவது கவிபாடக் கற்றிருக்கின்றனையா?'
'குழறிக் குழறிக் கொஞ்சம் பாடுவேன்'
'கு' என்று தொடங்கி, 'கு' என்று முடிக்கவேண்டும். சிவ சம்பந்தமாக இருக்கவேண்டும். நேரிசை
வெண்பாவாகவும் அமையவேண்டும். ஊருடையான் என்று இடையில் வரவேண்டும். பாடு'
'புலவர்க்கு வெண்பாப்புலி'. எடுத்த எடுப்பிலே இந்தக் கடுமையான கட்டளை பிறந்தது. மாணவராகிய
சிவப்பிரகாசர் உடனே அடியில் வரும் நேரிசை வெண்பாவைப் பாடினார். ஆ. ஆ. என்ன பாடல்? அழகிய
அரிய தமிழ்ப் பாடல்.
குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லையதள் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு.
இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் பத்து முறையாவது படியுங்கள். சொல்லழகு, நடையழகு, தொடையழகு,
பொருளாழம் முதலிய எத்தனை அழகுகள். அத்தகைய பாடல்களைப் படித்தல்லவா ஒருபுலவர் பாடுகின்றார்.
"இருந்தமிழே உன்னால் இருந்தேனே வானோர்
விருந்தமிழ்தம் என்னினும் வேண்டேன்"
அவருக்குத் தமிழில் இருந்த ஆர்வம் தான் என்னே. தேவர்களுடைய புதிய அமிர்தங் கூடக் கசக்கின்றதாம்.
இனி அந்தப் பாடலைப் பாருங்கள்.
"குடக்கோடு வானெயிறு கொண்டாற்கு"
குடக்கு ஓடுவான் எயிறு கொண்டாற்கு. குண (கீழ்) திசையிலிருந்து குட (மேல்) திசை நோக்கிச் சென்று
பொழுதை யளக்கின்றவன் சூரியன்.
சிவ நிந்தை புரிந்த தட்சனுடைய யாகத்தில் அவிசை விரும்பிக் கலந்து கொண்ட அமரர்களுள் சூரியனும் ஒருவன்
அமரர் அறியாமையை யகற்றும் பொருட்டு சிவபெருமான் வீரபத்திரரை தக்கனுடைய மகத்தையும் அகத்தையும்
அழிக்கும் பொருட்டு ஏவினார். வீரபத்திரர் யாகசாலை வந்தார். எதிர்த்து நின்ற சூரியனுடைய
பற்றுண்டாக்கினார் (பல் துண்டாக்கினார்). பற்றற்றான்மீது பற்றுண்டாக்கினார். பற்றுண்டாக்கிப் பரமன் மீது
பற்றுண்டாக்கி யருள் புரிந்தார்.
இதனை இந்த முதல் வரி தெரிவிக்கின்றது. குடக்கோடுவானாகிய சூரியனுடைய, எயிறு - பல்லை, கொண்டவன்
- சிவபெருமான்.
(தொடரும்)
------------------------------
மதுரைக்கு எண்பதே கி.மீ. தொலைவில் தென்மேற்கே இருக்கும் சிவகாசியில் இருந்து அகத்தியத்தில்
இரண்டாண்டுகளுக்கும் மேலாக மடல்களை வாசிப்பவனாக மட்டுமே இருந்து வந்தேன்.
இரண்டு நாட்களாக ஏதோ ஒன்று என்னையும் அகத்தியத்தில் எழுதினால் என்ன என்று தூண்டிக் கொண்டே இருந்தது.
சாதாரண பட்டயக் கணக்காளனான (Chartered Accountant) என்னால் என்ன எழுத முடியும் என்று
தோன்றவில்லை.
இன்று ஏதோ ஒன்றைத் தேடும் போது பரணில் இருந்து பொக்கிஷம் போல் ஒரு பொட்டலம் கிடைத்தது.
என்னவென்று அவிழ்த்துப் பார்த்தேன். அத்தனையும், எனது பெற்றோர்கள் அவர்கள் காலத்தில் சந்தா செலுத்தி
வாங்கிய ஒரே மாத இதழ்களின் தொகுப்பு.
இக்கட்டுரையின் ஆசிரியர் தான் அவ்விதழுக்கும் ஆசிரியர். அவரா? மாத இதழா? ஆசிரியரா? என்று தான்
ஆச்சரியம் அடைந்தேன்.
சிற்றூராக இருப்பினும், ஆண்டு தோறும் மார்கழி மாதம் 5 முதல் 10 நாட்களாவது வந்து எங்கள் இல்லத்தில்
இந்தக் கட்டுரையாளரைத் தங்க வைத்துப் பணிவிடை புரியும் பாக்கியம் பெற்ற குடும்பத்தில் சிறுவன் நான்.
அப்போதெல்லாம் பள்ளி செல்லும் வயது. அவர் வந்தாலே வீடெங்கும் உற்சாகம் பிரவாகமெடுக்கும்.
இன்னும் என்ன ரகசியம். நான் பார்த்த இதழ்கள் அனைத்தும் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பல்லாண்டு
காலம் ஆசிரியராக இருந்து படைத்த திருப்புகழமிர்தம் என்னும் மாத இதழ்கள். ஒவ்வொரு இதழிலும்,
அன்னாருக்கே உரிய அழகு தமிழில் ஒரு திருப்புகழுக்கு பதவுரை பொழிப்புரை விரிவுரை மற்றும் கருத்துரை,
கற்பு' என்ற தலைப்பில் பல்வேறு பெண்களின் கதைகள், அறிவுரைக் கதைகள், ஆன்மீகக் கதைகள் என்று அப்பப்பா
ஒரு இதழுக்குள் இத்தனை விஷயங்களா என்று அதிசயித்துப் போனேன். கிட்டத்தட்ட 30 மாத இதழ்கள்
கிடைத்துள்ளன. மேலும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். தாட்கள் அப்பளம் போல் நொறுங்குவதால்
மென்மையாகக் கையாள வேண்டியிருக்கிறது.
அகத்தியத்தில் அவருடைய திருப்புகழமிர்தத்திலிருந்து சில சொட்டுக்கள் இடலாம் என்று நினைக்கின்றேன்.
இந்தக் கட்டுரையை துன்முகி ஆண்டு ஐப்பசித் திங்கள் (அக்டோபர் - 1956) இதழிலிருந்து எடுத்துள்ளேன்.
திருவருள் துணையும், ஜெபி ஐயா மற்றும் அனைவரின் ஆதரவும் இருப்பின் மேலும் தொடரலாம் என்று கருதுகின்றேன்
பணிவுடன்,
சுப. இரத்தினகிரி.
[Non-text portions of this message have been removed]