எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் லட்சுமி வடிவில்
திகழ்கிறாளோ அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்,
போற்றியே போற்றி.
அரசர்கள், சர்வாதிகாரிகள் போன்றோர்களிடம் ராஜ்ய
லட்சுமியுடன் மேலும் சில லட்சுமிகள் இருப்பார்கள்.
அந்த ஆசாமிகளில் சிலர் ஸ்விட்சர்லாந்து பேங்கில் நம்பர்
அக்கவுண்ட்டில் பணத்தைப் போட்டிருப்பார்கள். ஸாமோஸா,
பாட்டிஸ்ட்டா, மார்க்கோஸ், ஈரானிய ஷா, இடி அமீன் போன்று
விரட்டியடிக்கப்பட்ட பின்னர், வேற்று நாடுகளில் தங்கி
செளகரியமாக இருப்பார்கள். அவர்களிடம் ராஜ்யலட்சுமி
இருக்கமாட்டாள். ஆனால் தனலட்சுமி போன்று வேறு பல
லட்சுமிகள் இருப்பார்கள்.
எவ்வளவோ சொத்துக்களும் பொருளும் இருந்தாலும்கூட
அவற்றையெல்லாம் அனுபவிப்பது பாக்கியலட்சுமியின்
அருளால்தான்.
ரஷ்யாவில் 1918-ஆம் ஆண்டில் புரட்சி நடந்தது.
அதற்கு முன்னால் சுமார் நானூறு ஆண்டுகளாக ரஷ்யாவை
ரோமானோவ் என்னும் அரச பரம்பரையினர் ஆண்டுவந்தனர்.
அந்த நாட்டின் சக்கரவர்த்தியை ட்ஸார் என்று குறிப்பிடுவார்கள்.
கடைசியாக நிக்கலாஸ் என்பவர் ட்ஸாராக இருந்தார்.
அவரைக் குடும்பத்துடன் சிறை வைத்திருந்துவிட்டு, சில
மாதங்கள் கழித்து, கொன்றுவிட்டார்கள்.
ட்ஸார் குடும்பத்தினரின் பெரும் பொக்கிஷம் ஸ்விட்ஸர்லாந்திலும்
இன்னும் பல இடங்களிலும் இருந்தது. சொத்தும் பெரும் சொத்து.
ட்ஸாரின் தங்கையாகிய Grand Duchess Olgaவும் தாயும்
மட்டுமே தப்பினர். வேறு சில ரோமானோவ் பிரபுக்களும் தப்பினர்.
ஆனாலும் பலவிதமான ஆபத்துக்களை எதிர்நோக்கிவிட்டு,
கடைசியில் கானடா நாட்டில் ஒரு பார்பர் கடையின் மேல்மாடியில்
ஓர் அப்பார்ட்மெண்டில் குடியிருந்தார்.
கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த ரோமானோவ் சொத்து.
கைக்கும் எட்டவில்லை. வாய்க்கும் எட்டவில்லை.
அதை அடையவோ அனுபவிக்கவோ அவருக்குப் பாக்கியம்
இல்லை.
இத்தனைக்கும் நெப்போலியனைத் தோற்கடித்த
ஆனாப்பட்ட ட்ஸார் அலெக்ஸாண்டரின் பேத்தி; ட்ஸார்
மூன்றாம் அலெக்ஸாண்டரின் மகள்; ட்ஸார் நிக்கலாஸின்
தங்கை.
ஊட்டி போன்ற இடங்களில் சிலருக்கு பங்களா
இருக்கும். ஆனால் அவர்கள் சென்னை போன்ற தூசியும்,
வெப்பமும் மிகுந்த சந்தடியான இடங்களில் பல பிரச்சனைகளுடன்
போராடிக் கொண்டு, பல ஸ்ட்ரெஸ்களுக்கு ஆளாகிக்கொண்டு
மும்முரமாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள்.
நடப்பில் தமிழ்ப் படத்தில் வருவதைப் போல அந்த
பங்களாக்களை அங்குள்ள தோட்டக்காரனோ காவல்காரனோ
அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
இது பாக்கியலட்சுமியின் கைங்கர்யம்!
இங்கிலாந்து நாட்டின் அரசியார் இரண்டாம் எலிஸபெத்
இந்த உலகிலேயே ஆறாவது பெரிய கோடீஸ்வரியாக
விளங்கினார். நிலபுலன், சொத்துப்பத்து, நகைநட்டு,
ஸ்டாக்கு, ஷேர், அணிமணி, ஆடை ஆபரணம், ஆள், அம்பு,
சேனை, குதிரை, லொட்டு லொசுக்கு என்று கோடிக்கணக்கில்
தேறும்.
லொட்டு என்றும் லொசுக்கு என்றும் குறிப்பிடப்படும்
உதிரியான பழம் பொருள்கள் அரசியாரிடம் நிறையவே உண்டு.
அவற்றில் பழைய பீங்கான் சாமான்கள், ஐந்தாம் ஜார்ஜின்
தபால்தலை சேகரிப்பு, புராதனமான மேஜை நாற்காலி
போன்றவை, பிரபல பழைய ஓவியங்கள் ஆகியவை அடங்கும்.
இவற்றின் மொத்த மதிப்பு கோடி டாலருக்கும் மேல்!
ஏராளமான ஜாதி ரேஸ் குதிரைகளும் மற்ற வகைக்
குதிரைகளும் அவரிடம் இருக்கின்றன. அவற்றின் மதிப்பும்
லட்சக்கணக்கில் இருக்கும்.
இந்தியாவிலிருந்து எடுத்துச்சென்ற பல வைரம் போன்ற
மணிக்கற்களும் இருக்கின்றன.
ஆகவே, அவரிடம் ராஜ்யலட்சுமி, தனலட்சுமி,
கீர்த்திலட்சுமி போன்ற லட்சுமிகள் இருக்கின்றனர்.
ஆனாலும் நடக்கிற நடப்பைப் பார்க்கும் போது ஏதோ
சில லட்சுமிகள் சரியில்லாதது போலத் தொன்றுகிறது.
வீட்டுக்கு வந்த மகாலட்சுமிகள் சரியில்லாத
காரணத்தால் கிருஹலட்சுமி நன்றாக அமையவில்லை என்று
தெரிகிறது.